வீட்டு மனை அங்கீகாரம்

 

நிறைய இடங்களில் பஞ்சாயத்து அப்ரூவல் பெற்ற பிளாட் எனச் சொல்லி வீட்டு மனைகள் விற்கப்படுவதைக் காணலாம். உண்மையைச் சொன்னால் எந்த பஞ்சாயத்து தலைவருக்கும் வீட்டு மனை அங்கீகாரம் / லே அவுட் அப்ரூவல் (Lay out Approval ) தர அதிகாரம் கிடையாது.

கட்டிட அப்ரூவல் ( Building Plan approval ) என்பது வேறு, லே அவுட் அப்ரூவல் என்பது வேறு. இரண்டுக்கும் அனுமதி பெறும் வழிமுறைகளும், அனுமதி தரும் ஆட்களும் வேறு வேறாகும்.

ஒரு நிலத்தினை பிளாட்டுகளாகப் (Plots) பிரித்து விற்கும் போது லே அவுட் அப்ரூவல் என்பது மிக முக்கியம். அப்படி வாங்கிய பிளாட்டில் நாம் வீடு அல்லது கட்டிடம் கட்டும் போது கட்டிட அனுமதி வாங்க வேண்டும்.

தமிழகத்தை பொருத்த வரை நில அங்கீகார அனுமதி நடைமுறை என்பது மூன்று விதமாக இருக்கும்.

1. சென்னைக்குள் உள்ள நிலங்களுக்கு சி.எம்.டி.ஏ. ( CMDA - Chennai Metropolitan Development Authority) என்ற துறையின் மூலம் அனுமதி வாங்க வேண்டும்.

2. சென்னையைத் தவிர்த்த பிற பகுதிகளில், பிரிக்கப்படும் நிலம் 10 ஏக்கருக்கு அதிகமாக இருப்பின் நேரடியாக டி.ட்டி.சி.பி. (DTCP - Directorate of Town and Country Planning ) துறையில் அனுமதி பெற வேண்டும்.

3. சென்னையைத் தவிர்த்த பிற பகுதிகளில், பிரிக்கப்படும் நிலம் 10 ஏக்கருக்குக் குறைவாக இருப்பின் எல்.பி.ஏ. (LPA - Local Planning Authority ) எனப்படும் டி.ட்டி.சி.பி. யின் துணை அமைப்பின் மூலம் அனுமதி பெற வேண்டும்.

இந்த மூன்று அனுமதிகளில் ஏதேனும் ஒரு முறையான அனுமதி பெற்ற நிலம் மட்டுமே தற்போது பதிவதற்கு அனுமதிக்கப்படும்.

2016 ஆம் அண்டுக்கு முன்னால் அங்கீகாரம் பெறாத மனைகளைப் பதிவு செய்வதில் எந்த சிக்கலும் இருக்கவில்லை.

எனவே விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்க ஆரம்பித்தனர். இது தொடர்பாக ஒரு பொது நல வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது

அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 9’2016 அன்று விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரம் பதியவும், அங்கீகாரமில்லாத மனைகளைப் பத்திரப்பதிவு செய்யவும் தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின்னர், 20.10.2016 க்கும் முன் பத்திரப்பதிவு செய்திருந்த மனைகளை மறுபதிவு செய்துகொள்ளலாம் என்றும் ஒரு விளக்கம் அளித்தது.

பின்னர் இந்த வழக்கின் தொடர்ச்சியில் சில காலம் இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் பின்னர் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

குழப்பம் தவிர்ப்பதற்காக, 04.05.2017 அன்று அரசு அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகள் மற்றும் தனிமனைகளை வரைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி அங்கீகாரம் பெறாத மனைகளை அங்கீகாரம் பெறுவதற்கு ரூ.500 கட்டணத்துடன் ஆன்லைனில் விண்ணப்பித்து அங்கீகாரம் பெறலாம்.

அதற்கான இணைப்பு http://www.tnlayoutreg.in/

ஏற்கனவே இதன் கால அளவு முடிந்து கெடு நீட்டிக்கப்பட்டு தற்போது  28.02.2021 உடன் கால அளவு மீண்டும் முடிந்துள்ளது.

இந்த இணைப்பின் மூலம் அங்கீகாரம் பெற்ற மனையினைப் பதிவதற்கும் எந்தச் சிக்கலும் இல்லை.

எனவே ஒரு வீட்டு மனையினை வாங்கும்போது மேற்சொன்ன அனுமதி உள்ளதா இல்லையா எனப் பார்த்து வாங்கவேண்டும்.

Comments

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27