இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 7

ஏழு

என்ன நண்பா…. உற்சாகமாக இருக்கிறாயா….?

தமிழ் எழுத்துக்களின் அடிப்படை இலக்கணத்தைப் பார்த்துவிட்டோம்.

அடுத்ததாக சில முக்கிய விசயங்களையும் பார்த்து விட்டு, நமது இலக்கான பிழைதிருத்தம் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம்.

பொதுவாக, நாம் பேசும் பேச்சு வழக்குத் தமிழானது கொச்சைத்தமிழாகவே இருக்கிறது.

ல கரம், ள கரம் போன்ற வேற்றுமைகளை நாம் முறையாக உச்சரிப்பதில்லை. அதன் காரணமாகவே நாம் எழுதும்பொழுது அதிகமான பிழைகளைச் செய்கின்றோம்.

ஏனெனில் நாம் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும், நம் மனதளவில் நமக்குத் தெரியாமலே அனிச்சையாக உச்சரிக்கப்படுகின்றது. அப்படி உச்சரிக்கும் வார்த்தைகளை நாம் சரியாக உச்சரிப்போமேயானால் நம்மால் பிழையின்றி எழுத முடியும்.

எனவே, எழுத்துக்களை உச்சரிக்கும் முறையினைக் கற்றுக்கொள்வது அவசியம்.

ஒவ்வொரு எழுத்தினையும் உச்சரிப்பதற்கு , பிறக்கும் இடமும் ( மார்பு, கழுத்து, தலை, மூக்கு), ஒலிப்பு முனைகளும் ( இதழ், நா, பல், அண்ணம்) அடிப்படையாய் இருக்கின்றன.

ரெம்பவும் குழப்பிக்கொள்ளாதே நண்பா, கீழ்க்கண்ட சில விசயங்களை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்.

Ø  உயிர் எழுத்துக்கள் 12 மற்றும் இடையின எழுத்துக்கள் 6 ஆக மொத்தம் 18 எழுத்துக்கள் கழுத்தில் இருந்து பிறக்கின்றன. ஒருமுறை உச்சரித்துப்பார். உனக்குப் புரியும்

Ø  மெல்லின எழுத்துக்கள் ஆறும் மூக்கிலிருந்து பிறக்கின்றன.

Ø  வல்லின எழுத்துக்கள் ஆறும் மார்பிலிருந்து பிறக்கின்றன.

Ø  ஆய்த எழுத்து தலையினை இடமாகக் கொண்டு பிறக்கின்றது.

எல்லா எழுத்துக்களையும் உச்சரித்துப் பார்த்தாயா…? புரிந்ததா…?

அடுத்த முக்கியமான விசயம், ல-ள-ழ, ர-ற, ந-ன-ண ஆகியவற்றின் ஒலிப்பு வித்தியாசம்.

நமது அதிகமான பிழைகள் இதில்தான் ஏற்படுகின்றன.

ஒரு எழுத்தினை மாற்றி விட்டால் அர்த்தமே மாறி விடுகிறது. உதாரணமாக பள்ளிக்கூடம் என்றால் கல்வி கற்கும் இடத்தைக் குறிக்கும். பல்லி என்றால் ஒரு உயிரினைத்தைக் குறிக்கும். இரண்டினையும் மாற்றி எழுதினால் எப்படி இருக்கும். சொல் நண்பா…..

அதனால்தான் சொல்கிறேன், நீ தமிழினை சரியாக உச்சரித்துப் பழகிக்கொண்டாலே உனது எழுத்துப்பிழைகள் வெகுவாகக் காணாதுபோய்விடும்.

சரி இந்த உச்சரிப்பினை எப்படி அறிந்து கொள்வது. நான் உனக்கு வார்த்தைகளால் விளக்கப்போவதில்லை.

கீழ்க்கண்ட படத்தினைப்பார். நீயே அறிந்து கொள்வாய்….


இந்தப்படம் உனக்கு எளிதாய்ப் புரிய வைத்திருக்கும். இனி நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்.

இன்றிலிருந்து தமிழ் வார்த்தைகளைப் பேசும்பொழுது சரியாய் உச்சரித்துப் பழகு.

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்.

சரி நண்பா உச்சரிப்பினைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டிருப்பாய் என்று நம்புகிறேன்.

அடுத்ததாக, இன்னும் சில விசயங்களை நீ தெரிந்து கொள்வது அவசியம்.

தமிழில் சில எழுத்துக்களை நட்பு எழுத்துக்கள் என்போம். அதாவது இணைபிரியாத நண்பர்கள் போல சேர்ந்து வருவார்கள்.

Ø  ங் – க   ( எ.கா. : சிங்கம்)

Ø  ஞ் – ச  (எ.கா. : மஞ்சள்)

Ø  ண் – ட (எ.கா. : பண்டம்)

Ø  ந்  - த (எ.கா. : பந்தல்)

Ø  ம் – ப (எ.கா. : கம்பன்)

Ø  ன் – ற (எ.கா.: தென்றல்)

மேலே சொன்ன எழுத்துக்களைப்பார். ஒவ்வொரு மெல்லின மெய் எழுத்திற்கும், ஒரு வல்லின உயிர்மெய் எழுத்து நட்பாய் இருக்கும்.

இப்போது ஞாபகத்தில் வைத்துக்கொள். எங்கெல்லாம் குறிப்பிட்ட மெல்லின மெய் வருகின்றதோ அங்கெல்லாம் அதற்கு நட்பான வல்லின உயிர்மெய் எழுத்துத்தான் வரும். உன் மனதுக்குத் தோன்றும் வார்த்தைகளெல்லாம் சொல்லிப்பார்.

சரியா….. இனி ‘தென்றல்’ என்பதனை ‘தெண்றல்’ என்றோ அல்லது ‘தென்ரல்’ என்றோ எழுதமாட்டாய்தானே…?

( இனி ரெண்டு சுழி ன, மூணு சுழி ண என்று சொல்லாதே நண்பா தந்நகரம், டண்ணகரம், றன்னகரம் என்று சரியாகச் சொல்)

அடுத்த முக்கியமான விசயத்தினைப் பார்க்கலாம்.

மெய்யெழுத்துக்களை மூன்று வகைகளில் பிரித்து நினைவில் வைத்துக்கொள்.

1) உடன் நிலை மெய்மயக்கம் : அதாவது தன் எழுத்துடன் மட்டுமே சேர்ந்து வரும் மெய்யெழுத்துக்கள்.  க், ச், த், ப் ஆகியவை. ஒரு வார்த்தையில் ‘க்’ வந்தால் அடுத்து ‘க’ தான்  வரும். வேறு எழுத்து வராது. அதே போலத்தான் மற்ற மூன்றும்.

2) வேற்று நிலை மெய் மயக்கம் : அதாவது தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துடன் சேரும் எழுத்துக்கள்.  ர், ழ் ஆகியவை. ஒரு வார்த்தையில் ர் வந்தால் அதற்கு அடுத்து ர வராது. ழ் வந்தால் அதற்கடுத்து ழ வராது.

3) தன் எழுத்து பிற எழுத்து இரண்டுடனும் சேர்ந்து வருபவை. மேலே சொன்ன க், ச், த், ப், ர், ழ் தவிர மற்ற அனைத்தும்

சரியா நண்பா. … இப்போது உனக்குத் தெரிந்த வார்த்தைகளெல்லாம் சொல்லி மேலே உள்ள மூன்று விதிகளையும் சரிபார்த்துக்கொள்.

அடுத்த முக்கியமான விசயம் ஈரொற்று மெய் மயக்கம் என்பது.

ஒன்றும் பெரிய விசயமில்லை. பயந்து விடாதே….

ய், ர், ழ் ஆகிய மெய்யெழுத்துக்கள் இன்னொரு மெய்யெழுத்துடன் சேர்ந்து வருவது உண்டு. (உதாரணம்: காய்ச்சல், உயர்ச்சி, வீழ்ச்சி) மற்ற மெய்யெழுத்துக்கள் எதுவும் இன்னொரு மெய்யெழுத்துடன் சேர்ந்து வராது.

என்ன நண்பா இன்றைக்குப் பார்த்த எளிமையான சில விசயங்கள் உனக்கு நன்றாகாவே புரிந்திருக்கும் என நினக்கிறேன். புரிந்தால் மட்டும் போதாது, அவற்றை உன் நினைவிலும் பதித்துக்கொள்.

சரியா….. சென்று வருகிறேன். மீண்டும் நாளை சந்திப்போம்.

-நா.கோபாலகிருஷ்ணன்



Comments

  1. மிக அருமையான விளக்கம் சகோ

    ReplyDelete
  2. மொழியைப் பற்றிய அறிவையும் மொழி மரபையும் அதன் சொற்களஞ்சியத்தையும் அடிப்படை இலக்கண அறிவையும் பெறாமல் கவிதை எழுத விரும்புவது மிகக் கொடுமையான செயல். உடனிலை மெய் மய்ககம், வேற்றுநிலை மெய் மயக்கம் என்பதெல்லாம் தமிழின் ஆழமான மொழியியல் கருத்துக்கள். மக்கள் வழக்கோடு தொடர்புடையது. இன்ன எழுத்துக்குப் பின்னால் இன்ன எழுத்து வரும். இன்ன வராது என்பது வழக்கின் வரையறை. அதாவது அத்தகைய சொற்களே தமிழில் இல்லை. இந்த அருமையான கருத்துக்களையெல்லாம் பின்னால் ;தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக அமைந்த நல்ல பதிவு. இது ஒரு தூய்மைத் தொண்டு. தொண்டு சிறப்பது பயனாளிகள் பெறும் பயனால்! கவிஞர்கள் மற்றும் தமிழாசிரியர்கள், முதுகலைப்பட்டதாரிகள் எல்லாம் இதனைப் பயன்படுத்திக்;கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள்! தொடர்க!

    ReplyDelete
    Replies
    1. எளிமையால் அருமை!

      வாழ்க நின் தமிழ்த்தொண்டு!

      ( தமிழ்த்தொண்டு- ழ்த் - ஈரொற்று மெய்மயக்கம்...
      மெய்மயக்கம்- க்க- உடன் நிலை மெய்மயக்கம்...)

      கற்றேன் நின்னாள்! நன்றி நண்பா!

      ரெ.பாண்டி மணிகண்டன்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _நாள் 21

Preparing a book in Kindle direct publishing

இலக்கணம் கற்போம்…. பிழைகளைத் தவிர்ப்போம் – தொடர் _ நாள் 27